விஸ்வரூபம் எடுக்கும் ஸ்டெர்லைட் பிரச்சனை...! என்ன சொல்கிறது தமிழக அரசு..!
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உரிய முறையில் பரிசீலிக்கும் எனவும் நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்கட்சிகள் இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என சின்ன விஷயத்தையும் பெரிது படுத்தி காண்பிக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்த குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. இந்த ஆலையில் தாமிர உருக்கு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. செம்பு கம்பி, கந்தக அமிலம், பாஸ்பரிக் அமிலம் ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த ஆலையில், அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான கந்தக-டை-ஆக்ஸைடு என்ற நச்சு வாயு வெளியானதால், அந்த ஆலை அமைந்துள்ள பகுதியை சுற்றிய பல கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
ஏற்கனவே இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையையே மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்திவரும் நிலையில், ஆலை விரிவாக்கப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. ஆலை விரிவாக்கப்பட்டால், மக்கள் வாழ்வதற்கே ஏற்ற பகுதியாக இது இருக்காது எனக்கூறும் அப்பகுதி மக்கள், ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், மாணவர்களும் களத்தில் குதித்துள்ளனர். இதுகுறித்து எதிர்கட்சிகளும் கடும் கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு உரிய முறையில் பரிசீலிக்கும் எனவும் நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்கட்சிகள் இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என சின்ன விஷயத்தையும் பெரிது படுத்தி காண்பிக்கிறார்கள் என அவர் தெரிவித்தார்.