திரும்பவும் சொல்றேன் அவர் தான் பிரதமர் வேட்பாளர் !! அடித்துச் சொல்லும் ஸ்டாலின் !!
இப்பவும் சொல்றேன், எப்பவும் சொல்வேன் ராகுல் காந்தி தான் எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கருணாநிதியின் சிலை திறப்பு விழாவின்போது பேசிய ஸ்டாலின் , ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி தான் என அறிவித்தார்.
இது தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக திரண்ட கட்சித் தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. தெலுங்கு தேசம், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை,
ஸ்டாலின் தவிர மற்ற தலைவர்கள் அனைவரும் தேர்தல் முடிந்த பிறகு பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவித்தனர். பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் இதைக் கிண்டல் செய்தன.
ஸ்டாலின் அவசரப்பட்டு சொல்லிவிட்டாரோ என திமுகவினரே நினைக்கத் தொடங்கிளர். அதன் பிறகு ஸ்டாலின் இது தொடர்பாக மீண்டும் பேசவேயில்லை.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 2000 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், திமுக கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என மீண்டும் கூறினார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, இப்பவும் சொல்றேன், எப்பவும் சொல்வேன் ராகுல் காந்தி தான் எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார்.