அப்பா சமாதியில் பதவியேற்க ஸ்டாலின் திட்டம்: என்னடா நடக்குது தலைநகர்ல?
எக்ஸிட் போல் முடிவுகள் இப்படி டோட்டலாய் வெச்சு செய்துவிட்டதால் ராகுல் தரப்பு அநியாயத்துக்கு அப்செட் ஆகி கிடக்கிறது. ’இம்புட்டு உழைச்சும் மீனு சிக்கலையே மம்மி’ என்று சோனியாவின் தோள் சாய்ந்து ராகுலும், ராகுலின் கரம் பற்றி பிரியங்காவும் வருந்துகின்றனர்.
அதேவேளையில் தமிழகத்தில் ஸ்டாலின் அண்ட்கோவோ இந்த ஃபீலிங் ஃபீவருக்குள் விழாமல், வேறு ஒரு சிந்தனையில் இருக்கிறார்கள். அது ‘முதல்வராக பதவியேற்கும் நிகழ்வை எங்கே நடத்தலாம்?’ என்பதுதான் அது. காரணம், இடைத்தேர்தல் நடந்திருக்கும் தொகுதிகளில் கணிசமானவை தி.மு.க.வின் கைகளுக்குள் வந்து சேரும் என்று உறுதியான தகவல்கள் அவரை எட்டியிருப்பதுதானாம்.
ஒரு வேளை இடைத்தேர்தல் ரிசல்ட்டில் பெரியளவில் ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியான முடிவுகள் இல்லையென்றாலும் கூட வெகு விரைவில் ஒரு வழக்கின் தீர்ப்பு வர இருக்கிறது. அதை நினைத்து, தளபதி செம்ம ஹேப்பியில் இருக்கிறாராம். அது ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பான வழக்குதான்.
அதில் நிச்சயம் தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும், ஆட்சி நிச்சயம் கவிழும்! என்று நம்புகிறதாம் தி.மு.க. தரப்பு.
அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்து, தி.மு.க. பொறுப்பேற்கையில் பதவியேற்பு நிகழ்வை எங்கே வைத்துக் கொள்ளலாம்? என்பதை அலசுமளவுக்கு போய்விட்டார்களாம். வழக்கமான இடங்களை மற்றவர்கள் சொல்ல, ஸ்டாலினோ ‘தலைவர் சமாதியில் வெச்சுக்கலாம். அவர்கிட்டே ஆசீர்வாதம் வாங்கிட்டுதானே வேட்பாளர்கள் லிஸ்டை அறிவிச்சோம். அவர் ஆசியோடு ஆட்சியை துவங்குவோம்.’ என்றாராம்.
அப்பா மீது ஒரு மகன் வைத்திருக்கும் இந்த பாசம் சிலிர்க்க வைக்கிறது. ஆனாலும், ‘ஆட்சி கவிழும், பதவி ஏற்பேன்’ அப்படின்னு இப்படியெல்லாம் முடிவு பண்றது ரொம்ப ஓவரா தெரியலையா மிஸ்டர். தளபதி?!