பெங்களூரில் ரெய்டு நடத்தும் மத்திய அரசு கூவத்தூர் சம்பவத்தின்போது வேடிக்கை பார்த்தது ஏன்? ஸ்டாலின் அதிரடி கேள்வி…
குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்பாக கர்நாடகாவில் வருமான வரி சோதனை நடத்தும் மத்திய அரசு சென்னை கூவத்தூர் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்தபோது வேடிக்கை பார்த்தது ஏன்? என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கி உள்ள விடுதிகளிலும், அது தொடர்பான காங்கிரஸ் தலைவர்கள் வீடுகளிலும் ரெய்டுசெய்யும் வருமான வரித்துறை, சென்னை கூவத்தூர் விடுதியில் 120–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது வேடிக்கை பார்த்தது ஏன்? என்ற கேள்வி இப்போது எழுவதாக தெரிவித்துள்ளார்.
கூவத்தூர் விடுதியில் தடபுடலான விருந்துகளும், ஆட்டங்களும் பாட்டங்களும் கொண்டாட்டங்களுமாக, பிப்ரவரி 8–ந் தேதியில் இருந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்று, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிப்ரவரி 18–ந் தேதி வரை குதிரை பேரங்களும் தொடர்ந்த என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கூவத்தூர் விடுதியில் சசிகலா சில நாட்கள் தங்கி உறுப்பினர்களிடம் பேரம் நடத்தினார். எடப்பாடி பழனிசாமியும் அடிக்கடி சென்று சந்தித்து பேரம் நடத்தினார். 4 கோடி ரூபாய் முதல் 6 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது என்று கனகராஜ், சரவணன் ஆகிய இரு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாகப் பேட்டியளித்த பிறகும் கூட, அந்த இருவரிடமும் வருமான வரித்துறை விசாரணை நடத்தி இந்த பேரத்தில் கைமாறிய கோடிக்கணக்கான பணம் பற்றி கண்டுகொள்ளவில்லை என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூவத்தூர் கொண்டாட்டத்தை எல்லாம் பார்த்து இந்த மாநிலமும் சிரித்தது, நாடும் சிரித்தது. பேரத்தின் உச்சத்தில் கூட வருமான வரித்துறை கூவத்தூர் விடுதியில் ரெய்டு செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்
ஏனென்றால், சுதந்திரமான வருமான வரித்துறையை கூவத்தூர் பக்கமே எட்டிப்பார்க்க விடாமல் கூண்டுக் கிளி போல் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு அடைத்து வைத்தது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் பா.ஜ.க. அரசு இரட்டை வேடம் போட்டது.
சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு போன்ற சுதந்திரமிக்க அமைப்புகள் எல்லாம் அவமானத்துக்குரிய கூவத்தூர் பேரத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்க மத்தியில் உள்ள பாஜக அரசால் தூண்டப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்