அத்திவரதரை வெளியே எடுத்ததால் தான் மழை பெய்யுது… இன்னும் பெய்யும் பாருங்க ! குபீர் கிளப்பும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் !!
காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை வெளியே எடுத்ததனால்தான் மழை பெய்கிறது என்றும், இன்னும் நிறைய மழை பெய்யும் எனவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவில் குளத்தில் தண்ணீருக்டியில் இருந்த அத்தி வரதர் அங்கிருந்து எடுக்கப்பட்டு கடந்த 1 ஆம் தேதி முதல் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. கடந்த 21 நாட்களில் மட்டும் 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சேற்றிலும் தண்ணியிலும் பகவான் ஏன் கஷ்டப்பட வேண்டும்? இத்தனை ஆண்டுகளாக பூஜை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அவரை அதே இடத்தில் வைத்து சாமி கும்பிட பொதுமக்கள்.. லட்சோபலட்சம் மக்கள் இப்போது வந்து கொண்டிருக்கிறார்கள். காஞ்சீபுரம்கூட மறுபடியும் திருப்பதி ஆகிவிடும் என தெரிவித்துள்ளார்.
.
அதனால், தயவுசெய்து இந்த விக்கிரகத்தை புதைக்க வேண்டாம். இப்போதைக்கு அப்படியேகூட வச்சிக்கலாம். ஏன்னா... இத்தனை வருஷமா பூஜை பண்ணல. ஆனா.. ஒரு பவர் உண்டு. அந்தப் பவர் இருக்கிறதுனாலதான்.. ஆகர்ஷ சக்தி இருக்கிறதுனாலதான் இத்தனை மக்கள் அவரைத் தேடி வந்துக்கிட்டிருக்காங்க.
இது குறித்து தமிழக முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் அறநிலையத்துறை அமைச்சரிடமும் மற்றும் அனைத்து அமைச்சர்களிடமும் முறையிட உள்ளோம் நமது நாடு நன்றாக இருக்கவேண்டும் என்பதற்காக ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறதுனால.. வரம் தரக்கூடிய அத்திவரதரை தேடி வருகிறார்கள். அத்திவரதரை வெளியே எடுத்ததனாலதான்.. ஆங்காங்கே மழை பெய்யுது. இன்னும் நிறைய மழை பெய்ய வாய்ப்பு இருக்குது என ஜீயர் குறிப்பிட்டுள்ளார்..
அந்தக் காலக்கட்டத்தில், திருட்டு பயம் இருந்தது. விக்கிரகங்களை ஆங்காங்கே ஒளித்து வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால், இந்த அத்திவரதரைக்கூட கீழே பூமியில் புதைத்து மறைத்து வைத்துள்ளார்கள். இப்போது நமக்கு அந்த பயம் இல்லை.
இந்த மூர்த்தி.. மிகவும் பேசும் மூர்த்தி. அதனால், கோடிக்கணக்கான மக்கள் பார்ப்பதற்கு வந்துகொண்டே இருப்பார்கள். அதனால், அவரைப் பாதுகாக்க வேண்டுமென்று அடியேனும் கேட்டுக்கொள்கிறேன் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் தெரிவித்துள்ளார்..