ஆட்சியை கவிழ்க்க தினகரனுக்கு ஸ்பான்சர் ரெடி: சசிகலாவின் திடீர் முடிவின் பின்னணி.
அ.தி.மு.க.வின் வரலாற்றுப் பக்கங்களில் ஜெயலலிதா, சசிகலா எனும் பெயர்களுக்கு கீழே நிச்சயம் சசிகலா புஷ்பாவின் பெயரும் இருக்கும். சும்மாவா? ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே, அவர் தன்னை அடித்ததாக நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நின்று கதறி தேச கவனத்தை ஈர்த்தவராயிற்றே.
ஜெ., மறைவுக்குப் பின் அ.தி.மு.க. சிதறிக் கிடக்கும் நிலையிலும் ‘அ.தி.மு.க.வை வழிநடத்தும் ஒரே சக்தி நாந்தான். எனக்கு ஆதரவான ஏகப்பட்ட ஸ்லீப்பர் செல்கள் கட்சியில் இருப்பார்கள். நான் கட்டளையிட்டதும் அவர்கள் என் பின்னால் அணிவகுப்பார்கள்.’ என்று போன மாதம் கூட கூறியிருந்தார்.
ஆனால் சமீபத்தில் திடீரென தினகரன் ஆதரவாளர் அவதாரத்தை எடுத்திருக்கிறார் ச.பு. ஏன் இந்த திடீர் மாற்றம்? என்று கேட்டால் தென் தமிழகத்தை சேர்ந்த பெரும் ஆலை அதிபரான வைகுண்டராஜனை கை காட்டுகிறார்கள் விபரம் அறிந்தவர்கள். வி.வி.மினரல்ஸ் எனும் மணல் ஆலை அதிபர் இவர்.
ஏனாம்? அதாவது தாது மணல் பிஸ்னஸின் மூலமாகத்தான் தாறுமாறாக வளர்ந்தார் வைகுண்ட ராஜன். அரசாங்கத்துக்கே ஸ்பான்சர் செய்யுமளவுக்கு அவரிடம் மணல் போல் கொட்டிக் கிடக்கிறது கரன்ஸி. இந்நிலையில் தாது மணல் ஆலைகளை இயக்க அரசு விதித்த தடையை இன்னமும் விலக்கிக் கொள்ளவில்லை. இதனால் வைகுண்டராஜனின் பிஸ்னஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாம். பல முறை பல முக்கிய நபர்களிடம் தூது விட்டும் சாதகமான பதில் இல்லையாம்.
ஆக இதில் கடுப்பானதால் சசிகலா புஷ்பாவை தினகரன் ஆதரவாளராக மாற்றி, ஆளும் தரப்புக்கு கடுப்பை கிளப்பியிருக்கிறார் வைகுண்டராஜன் என்கிறார்கள். இத்தோடு நிறுத்தவில்லையாம், அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏதேனும் கொண்டுவரப்பட்டால் அப்போது தினகரனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்களை திருப்ப, உசுப்ப முழுமையாக ஸ்பான்சர் செய்ய தயார் என்றும் வி.வி.மினரல்ஸ் தரப்பு கூறியிருக்கிறதாம்.
ஆக அரசுக்கு கடுக்காய் கொடுக்கும் வைகுண்டராஜனின் முக்கிய மூவ்களில் ஒன்றே சசிகலா புஷ்பா, தினகரனின் ஆதரவாளராக மாறிய விஷயம் என்கிறார்கள். இதற்கு ஆளும் தரப்பின் ரியாக்ஷன் மூலம் வைகுண்டராஜனுக்கு சில பிரச்னைகள் வரக்கூடும்! ஆனால் எதையும் எதிர்கொள்ள அவர் தயாராக இருக்கிறாராம்.