சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா ? விசாரணை நடத்த உயர்மட்டகுழு….சித்தராமையா உத்தரவு…
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரை விசாரிக்க உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜெயிலில் சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகளும், சிறப்பு வசதிகளும் அளிக்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் கூறப்பட்டு வந்தன.
சிறை விதிகளை மீறி அவரை உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், வக்கீல்கள் அடிக்கடி சந்திப்பதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் எந்த பதிலும் அளிக்காமல் இருந்தது.
இந்த நிலையில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயில் புதிய டி.ஐ.ஜி.யாக ரூபா என்ற பெண் அதிகாரி சில வாரங்களுக்கு முன் பொறுப்பேற்றார். அவர் கடந்த 10-ந்தேதி ஜெயில் முழுவதும் சென்று அதிரடி சோதனை நடத்தினார். அப்போது ஜெயிலில் விதிமீறல்கள் நடைபெறுவதை கண்டு பிடித்தார்.
சசிகலாவுக்கு ஜெயிலில் தனி சமையல் அறை அமைத்து கொடுத்து இருப்பதாகவும் அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி வரை உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருக்கும் மூத்த அதிகாரி எச்.சத்திய நாராயண ராவ் மீதும் லஞ்சப் புகார் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது பொய்யான குற்றசாட்டு என்று தெரிவித்துள்ள கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணா, ரூபா தன் மீது வேண்டுமென்றே பொய் புகார் கூறிவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் தன்னிடம் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளதாகவும்இ இது பொய் புகார் அல்ல என்றும் பதிலடி கொடுத்துள்ளார்
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக உயர் மட்டக் குழு ஒன்றை நியமித்து அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இந்த குழு உடனடியாக விசாரணையைத் தொடங்கும் என்று தெரிவித்த சித்தராமையா, தவறு செய்தவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்றும் அதுவரை அனைவரும் கொஞ்சம் பொறுத்திருங்கள் எனவும் கூறியுள்ளார்