மீண்டும் ரத்தாகிறது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்..? - விளக்கம் சொல்லும் சிறப்பு தேர்தல் அதிகாரி...!
பணப்பட்டுவாடா குறித்து தற்போது வரை எவ்வித புகார்களும் அதிகமாக வரவில்லை எனவும் மீண்டும் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகுமா என்பது சூழ்நிலைகளை பொறுத்து முடிவு செய்யப்படும் எனவும் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், டிடிவி தினகரன் உள்ளிட்ட சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
இன்னும் 4 நாட்கள் மட்டுமே இருப்பதால் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொப்பி சின்னம் மீண்டும் கிடைக்காததால் டிடிவி தினகரன் பிரஷர் குக்கர் சின்னத்துக்கு வாக்குகேட்டு பிரசாரம் செய்து வருகிறார்.
இதனிடையே ஆர்.கே.நகரில் கடும் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆர்.கே.நகரில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறது.
ஆனால் அதிமுகவை சேர்ந்த மதுசூதனனும் டிடிவியும் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனிடையே திமுக இரு தரப்பின் மீதும் புகார்களை அள்ளி வீசுகிறது. இதுவரை ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்தமுறை ஓட்டுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது ஓட்டுக்கு ரூ. 6000 வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா இன்று காலை சென்னை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பணப்பட்டுவால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்து பேசிய அவர், பணப்பட்டுவாடா குறித்து தற்போது வரை எவ்வித புகார்களும் அதிகமாக வரவில்லை எனவும் மீண்டும் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகுமா என்பது சூழ்நிலைகளை பொறுத்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து ஆர்.கே.நகரில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்ட நிலையில், தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா, தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, மற்றும் மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.