தமிழ்நாட்டில் எத்தனை எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கு தெரியுமா..?
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்தில் அமையவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் எம்எல்ஏக்கள் மீதான 75 வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் அதற்குப் பிறகு தற்போது வரை நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு எம்.பி., எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 1,581 நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன. இதில், மக்களவை எம்.பி.க்கள் மீது 184, மாநிலங்களவை எம்.பி.க்கள் மீது 44 வழக்குகள் உள்ளன. இவற்றை விசாரிக்க 2 நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன.
மேலும், 65 வழக்குகளுக்கு மேல் உள்ள மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. அந்த வகையில் 10 மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைகின்றன.
160 வழக்குகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழகம் 75 வழக்குகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் தலா ஒரு வழக்கு மட்டுமே உள்ளது. மிசோரம் மாநிலத்தில் யார் மீதும் வழக்குகள் இல்லை.
எம்பிக்கள்., எம்.எல்.ஏக்கள் மீது நிலுவையில் உள்ள 1581 வழக்குகள் குறித்த முழுமையான தகவல்களை அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுள்ளது.
மத்திய அரசின் உத்தரவு பெறப்பட்டதும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தின் வழக்குகள் பிரித்து தரப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்படும் என சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.