“மக்களின் நலனில் அக்கறையாக செயல்படுவது சிலருக்கு இடையூறு…!!!” - இணையதளத்தில் கிரண்பேடி விலாசல்
புதுச்சேரியில் சட்டமன்ற சபாநாயகர் பரிந்துரை இல்லாமல், 3 எம்எல்ஏக்களுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநில முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்தார். மேலும், எம்எல்ஏ லட்சுமி நாராயணன், பதவி பிரமாணத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால், புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, மக்களுக்கான என் பணி தொடரும்' என புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
ஜனாதிபதி பணி நிறைவு விழாவில் பங்கேற்க, டெல்லி சென்றுள்ளேன். புதுச்சேரி நியமன, எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக, ஊடகங்களில் வந்த தகவல்களை பார்க்கும்போது, மக்களின் நலனில் அக்கறையோடு செயல்படுவது, சிலருக்கு இடையூறு செய்வது போல் உள்ளதாக அறிகிறேன். மக்களுக்கு பணி செய்வது, எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்த முடியும்.
ஊடகங்கள், நாளிதழ்களில் வெளியாகும் தகவல்களை பார்க்கையில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டுமென சிலர் விரும்புவது தெரிகிறது. மக்களுக்கு நல்ல வாழ்க்கைத்தரம் அமைய வேண்டாமா. இது போன்ற சூழலை, வாழ்நாளில் நிறைய பார்த்துள்ளேன். இது, எனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மக்களின் நலனுக்காக பணி செய்யவே, நாம் உள்ளோம்.
புதுச்சேரியில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு, மக்களுக்கான என் பணி தொடரும். அது, யாருக்கேனும் வருத்தம் அளித்தால், இறுதி முடிவெடுக்கும் அதிகார அமைப்பாக, நீதிமன்றம் உள்ளதால், அதை நாடி தீர்வை பெறலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.