நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவிக்கும் கருத்துகளை கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என பாஜகவின்  கூட்டணி கட்சியான சிவசேனா  எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், நாட்டின் இன்றைய பொருளாதார நிலை கவலை அளிப்பதாக இருக்கிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சிவீதம் 5 சதவீதம்தான் என்பது, நாம் நீண்ட பொருளாதார மந்த நிலையின் மத்தியில் இருக்கிறோம் என்பதற்கான அடையாளம் ஆகும். இந்தியா அதிவேகமாக பொருளாதார வளர்ச்சி காண்பதற்கான வளத்தைப் பெற்ற நாடு. ஆனால், மோடி அரசின் அனைத்து துறைகளிலும் உள்ள தவறான நிர்வாகம்தான் இந்த மந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது” என கூறி இருந்தார்.

அத்துடன், “மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த நெருக்கடியில் இருந்து நமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு பழிவாங்கும் அரசியலை கைவிட்டு, அனைத்து விவேகமான குரல்களையும், சிந்தனைகளையும் உடைய நபர்களை அரசு நாட வேண்டும்” எனவும் தெரிவித்து இருந்தார்.

ஆனால், மன்மோகன் சிங்கின் இந்த விமர்சனத்தையும் அறிவுரையும் பாஜக அரசு நேற்று நிராகரித்தது. இதுகுறித்து பேசிய தகவல், ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், “மன்மோகன் சிங்கின் ஆய்வை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உலகின் 11வது பெரிய பொருளாதாரமாக சக்தியாக இந்தியா இருந்தது. தற்போது, ஐந்தாவது இடத்தை நாம் பிடித்துள்ளோம். மூன்றாவது இடத்தை நோக்கி பயணித்து வருகிறோம்” என்று கூறினார்.

மேலும் இது குறித்து உங்களிடம் கருத்து எதுவும் கேட்கவில்லை…உங்க வேலையை மட்டும் பாருங்கள் என கூறி மன்மோகன் சிங்கை அசிங்கப்படுத்தியது.

இந்நிலையில் பாஜகவின் இந்தப் பேச்சுக்கு சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் , மன்மோகன் சிங்கின் பேச்சை பாஜக ஏற்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது. 

இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா இதழில், “பொருளாதார மந்தநிலை விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது என மன்மோகன் சிங் கூறியிருக்கிறார். அவருடைய ஆலோசனைகளை கேட்க வேண்டிய நேரம் இது. நிபுணர்களின் ஆலோசனைகளை நாம் எடுத்துக் கொண்டு பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.