மோடி அலை ஓய்ஞ்சிருச்சு …. ராகுல் அலை தொடங்கிருச்சு…சொல்றது யாரு பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா !!!
2014 ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது இருந்து மோடி அலை தற்போது ஓய்ந்துவிட்டதாகவும், இந்தியாவை வழி நடத்திச் செல்லும் திறமை ராகுல் காந்தியிடம் உள்ளது என்றும் சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக இரு கட்சிகளிடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது.
சிவசேனா கட்சித் தலைவர்கள் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா பத்திரிக்கையில் பாஜகவுக்கு எதிரான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, மோடி அலை வீசியதாகவும் தற்போது அது ஓய்ந்துவிட்டது எனவும் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்ட பிறகு, குஜராத்தில் மோடிக்கு எதிராக மக்கள் தெருக்களில் இறங்கி போராடத் தொடங்கிவிட்டார்கள் என குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு நாட்டை திறமையாக வழிநடத்திச் செல்லும் திறன் இருப்பதாகவும், அவரை சிறு குழந்டித என்று கிண்டல் செய்வது தவறு என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
இந்த விவாதத்தின்போது பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்ட்ரா மாநில கல்வி அமைச்சருமான வினோத் தாவ்டேவும் பங்கேற்றிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்ப்டடது.