மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் அமைக்கவுள்ள கூட்டணி ஆட்சியில் முதலமைச்சர்  பதவி சிவசேனாவுக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனித்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் இல்லாததால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இதற்கிடையில், மும்பையில் நேற்று சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த சந்திப்பின்போது அனைவரும் ஏற்கும் வகையிலான குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டம் தொடர்பான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இந்த அறிக்கை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நவாப் மாலிக் மும்பையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது நீங்கள் அமைக்கவுள்ள கூட்டணி அரசில் முதலமைச்சர் பதவி தலா இரண்டரை ஆண்டுகளுக்கு சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரசுக்கு பகிரப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், முதலமைச்சர் பதவிக்காகத்தான் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு சிவசேனா வெளியேறியது. எனவே, 5 ஆண்டுகளுக்கும் சிவசேனாவை சேர்ந்தவர் தான் முதலமைச்சராக பதவி வகிப்பார்’ என்று குறிப்பிட்டுள்ளார்

இதனிடையே சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நாளை ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.