தாயார் இறந்த துக்கத்திலும் அவசர கோப்புகளைப் பார்த்து கையெழுத்திட்டு அனுப்பிய முதல்வர்... குவியும் வாழ்த்துக்கள்
தனது தாயார் இறந்துவிட்ட துக்கத்திலும், புதுவை முதல்வர் நாராயணசாமி அவசர கோப்புகளைப் பார்த்து கையெழுத்திட்டு அனுப்பிவைத்தார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரியம்மாள், தனது சொந்த ஊரான பூரணாங்குப்பத்தில் வசித்துவந்தார். 96 வயதாகும் ஈஸ்வரி அம்மாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அரும்பார்த்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். கஜா புயல் நிவாரண நிதி கோருவதற்காக டெல்லி சென்றிருந்த நாராயணசாமி, தாய் மறைந்த தகவலறிந்ததும் புதுவை திரும்பினார்.
நாரயணசாமியின் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஈஸ்வரி அம்மாளின் உடலுக்கு திமுக எம்.பி கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நாராயணசாமியின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்திவந்தனர். தாயாருடைய உடல் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த நிலையில், துக்கத்திலும் தனது அலுவல்களை ஆற்றினார் நாராயணசாமி. வீட்டு வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்த அவர், அவசரக் கோப்புகளைப் பார்த்து அதற்கு கையெழுத்திட்டு அனுப்பினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.