பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க வேண்டும் – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ தேர்தல் ஆணையத்தில் மனு
நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கபடுவதாகவும், வாக்களிக்க தகுதி இல்லாதவர் ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக இருக்க கூடாது எனவும், எனவே சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.சி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும் அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளர் பதவியே கிடையாது எனவும், எனவே சசிகலா கட்சியில் நியமித்த எந்த பொறுப்பும் செல்லாது எனவும் அதிமுகவின் அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.சி.பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :
நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விலக்கபடுகின்றனர்.
மேலும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இழக்கின்றனர். வாக்களிக்க உரிமை இல்லாதவர் ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக இருக்க கூடாது.
அதிமுக சட்டதிட்டத்தின்படி குற்றவாளிகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலக்கபடுகின்றனர்.
குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அங்கீகரிக்க முடியாது.
எனவே 4 வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என கே.சி.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.