அரவக்குறிச்சியில் மீண்டும் தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பு....

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சட்டமன்ற தேர்தல் தேதி அடுத்தமாதம் நடைபெற உள்ள நிலையில், பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும், அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

தி.மு.க. சார்பில் கே.சி.பழனிச்சாமியும், அதிமுக சார்பில் மீண்டும் செந்தில் பாலாஜியும் களம் காண்கின்றனர். செந்தில் பாலாஜி களம் இறங்கிய உடனே உள்கட்சி மோதல் மற்றும் காலை வாருதல் ஆகிய வேலைகள் பரபரப்பாக தொடங்கின.

மீண்டும் செந்தில் பாலாஜி பதவிக்கு வந்துவிட்டால் தங்களது கட்சி பதவிக்கும் அரசு பதவிக்கும் வேட்டு வந்துவிடும் என சிலர் அஞ்சியதாக தகவல்கள் பரவின.

குறிப்பாக, கரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் செந்தில் பாலாஜிக்கு எதிராக உள்ளடி வேலைகளில் ஈடுபடுவதாக கிசுகிசுக்கள் இறக்கை கட்டி பறந்தன.

உள்கட்சி எதிரிகளை கொண்டே வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது அதிமுக தலைமைக்கு எப்போதுமே கை வந்த கலைதான்.

அந்தவகையில்தான் எடப்பாடி.பழனிச்சாமி பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் வெற்றி கனியை பறிக்க வேண்டிய கட்டயாம் செந்தில் பாலாஜியின் அரசியல் போட்டியாளரான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது செந்தில் பாலாஜியை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். தேர்தலில் ஓட்டு குறைவாக வாங்கினால் கூட தலைமையின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் இன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லபட்டி வெங்கடேச பெருமாள் கோவிலில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், இந்நாள் போக்குவரத்து துறை அமைச்சரும் ஒன்றாக சேர்ந்து பூஜை, புணஸ்காரங்கள் செய்து பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.

அதிமுக, திமுகவின் மானப்பிரச்சனையாக மாறியுள்ள இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் எ.வ.வேலுவும், அதிமுக சார்பில் எடப்பாடி.பழனிச்சாமியும் பொறுப்பாளர்களாக உள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமியை தாண்டி மாவட்ட அமைச்சர் என்கிற முறையில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைத்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளதால் ஆரம்பம் முதலே பம்பரம் போல் சுழல்கிறாராம் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

வேறு யாராவது காலை வாரினால் கூட அந்த பழி தம் மீது தான் விழும் என்பதால் அதீத எச்சரிக்கையோடு செயல்படுகிறாராம் இந்நாள் போக்குவரத்து துறை அமைச்சர்.