அரசு அதிகாரிகளை, காவல் துறை அதிகாரிகளை ஒருமையில் பேசுவதை அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அரசு அதிகாரிகளை, காவல் துறை அதிகாரிகளை ஒருமையில் பேசுவதை அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறப்பட்டது. இதை அடுத்து வடகிழக்கு பருவ மழை மற்றும் நிவாரண பணிகள் நிறைவுற்றப் பிறகு உரிய நடவடிக்கை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று, கொரோனா பரவல் குறைந்த பின்னர் மாதம் மாதம் முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் விஜயபாஸ்கர், வேலுமணி, விராலிமலை விஜயபாஸ்கர், வீரமணி என ரெய்டுகள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து 2 நாட்களுக்கு முன்னர் முன்னாள் மின்சார துறை அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. சோதனையில் ரூ.2,37,34,458 பணம், 1.130 கிலோகிராம் தங்க நகைகள், சுமார் 40 கிலோகிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத ரூ.2,16,37,000 பணம், சான்று பொருட்களான கைபேசிகள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனிடையே தொடர் சோதனைகள் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினர், அதிமுகவை அழிக்கும் நோக்கில் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடத்துவதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் மூலம் அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் அடுத்து யார் வீட்டில் சோதனை நடைபெறும் என்ற அச்சம் அதிமுகவினரிடையே நிலவி வருகிறது. இருந்த போதிலும் அதிமுகவை அழிக்க முடியாது, அசைக்க முடியாது என்று தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசியிருந்தார். அவரைப் போல பல முன்னாள் அமைச்சர்களும் முதலமைச்சர் ஸ்டாலினையும் இந்நாள் அமைச்சர்களையும் ஒருமையில் பேசி வருகின்றனர். இந்த நிலையில், அரசு அதிகாரிகளை, காவல் துறை அதிகாரிகளை ஒருமையில் பேசுவதை அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் கோவையில் எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்த முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் விதித்தார்கள். போராட்டம் நடத்திய பலரையும் கைது செய்தனர். ஆனால் இப்போது இந்த கட்டுப்பாடுகளை மீறி போராட்டம் நடத்துகிறார்கள். இதேபோல முன்னாள் அமைச்சர்கள் தங்கள் இஷ்டத்துக்கு பலவிதமான கருத்துளை வெளியிட்டிருக்கிறார்கள். அரசு அதிகாரிகளை, காவல் துறை அதிகாரிகளை ஒருமையில் பேசுவதை அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது. கடந்த கால ஆட்சியில் யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்கள், ஊழல் செய்து இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று.தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தோம். அதன் பேரில்தான் தவறு செய்தவர்கள் மீது நடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் தவறு செய்தவர்கள், கொள்ளை அடித்தவர்கள் யாரும் தப்ப முடியாது என்று தெரிவித்தார்.