நாங்க 7 வருஷமா சொன்னதைத்தான் இன்று ரஜினியும் கமலும் சொல்றாங்க!! புதுசா ஒண்ணும் இல்ல - சீமான் பாய்ச்சல்
நாம் தமிழர் கட்சி கடந்த 7 ஆண்டுகளாக கூறிவரும் அதே கருத்துகளைத்தான் ரஜினியும் கமலும் முன்வைக்கின்றனர் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவிவந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்தார். கமலும் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துவிட்டார். வரும் பிப்ரவரி 21ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்குவதாக கமல் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் அரசியல் களத்தில் இல்லாத நிலையில், ரஜினியும் கமலும் அரசியலில் குதிக்கின்றனர்.
ரஜினி மற்றும் கமல் ஆகிய நடிகர்களின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்களில் முதன்மையானவர் சீமான் ஆவார். நாம் தமிழர் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகளையும் விஷயங்களையும் முன்னிறுத்தித்தான் ரஜினியும் கமலும் அரசியலுக்கு வருகின்றனர். அதைத்தான் நாங்கள் ஏற்கனவே 7 ஆண்டுகளாக கூறிவருகிறோமே என சீமான் ஏற்கனவே பலமுறை தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழகத்திற்கு ஆட்சி மாற்றமோ தலைவர் மாற்றமோ தேவையில்லை. அடிப்படை அரசியல் மாற்றம் தான் தேவை என அதை முன்னிறுத்தி கடந்த 7 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி பணி செய்து வருகிறது. அதையேதான் தற்போது ரஜினி சொல்கிறார்.
அதேபோல, தமிழர்களாக ஒன்றுபட வேண்டும் என நான் பேசியபோது இனவெறி என்றனர். தற்போது அதைத்தான் கமல்ஹாசன் முன்னிறுத்துகிறார். கமல் பிரபலமான நடிகர் என்பதால், அமைதியாக உள்ளனர்.
நாம் தமிழர் கட்சி கடந்த 7 ஆண்டுகளாக கூறிவருவதைத்தான் ரஜினியும் கமலும் இன்று கூறுகின்றனர். புதிதாக எதுவும் இல்லை என சீமான் விமர்சித்தார்.