திருமாவளனுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக 2 வாரத்தில் காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனக்கு 2 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்ககோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே 2 முறை திருமாவளவனை மர்ம நபர்கள் சிலர் தாக்க முயன்றார்கள் எனவும், அதனை தொடர்ந்து திருமாவளனுக்கு போலீசார் பாதுகாப்பு கேட்டு தமிழக டி.ஜி.பிக்கு கடிதம் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த சம்பங்கள் நடந்தது தேர்தல் காலத்தில் . அப்போது நடந்த சம்பவத்தை காரணம் காட்டி வழக்கு போடுகின்றனர், அதற்காக தற்போது போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, அனைத்து அரசியல் தலைவருக்கும் பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை, ஏற்கனவே திருமாவளவனுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பான வழக்குகள் மீது எடுத்துள்ள நடவடிக்கை, மற்றும் போலீசார் பாதுகாப்பு வழக்குவது தொடர்பாக காவல்துறை 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைத்தார்.