முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டும் என மாணவ, மாணவிகள் அப்பல்லோ மருத்துவமனை எதிரே திருவிளக்கு பூஜை நடத்தினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ கடந்த மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் குழுவினரும் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் பல்வேறு கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்பட ஏராளமானோர் அப்பல்லோ மருத்துவமனை சென்று, முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து விசாரித்தனர்.

மேலும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களிலும், மசூதிகளிலும், தேவாலயங்களிலும் பிரார்த்தனை, ஜபம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா, பூரண குணமடைய வேண்டி அப்பல்லோ மருத்துவமனை முன்பு மாணவ, மாணவிகளின் திருவிளக்கு பூஜை நேற்று நடத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. அ.தி.மு.க. தொண்டர்கள் வெள்ளை பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அம்மா கராத்தே பள்ளி ஆசிரியர் தனசேகரன் தலைமையில் மாணவ, மாணவிகள் அப்பல்லோ மருத்துவமனை அருகில் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், ‘மாணவர்களுக்காக புதிய திட்டங்களை செயல்படுத்தியவர் முதல்வர் ஜெயலலிதா. அவர் முழு உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று நாங்கள் இறைவனை பிரார்த்திக்கிறோம். எங்களின் நம்பிக்கையை இறைவன் காப்பாற்றுவார்’ என்றனர்.