சும்மா சம்பளம் வாங்க முடியாது.. ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் தினமும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு..
பாடப்புத்தகங்கள் விநியோகம், கல்வித் தொலைக்காட்சி வழியில் பாடம் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துதல், பள்ளி வளாகங்களை பராமரித்தல் போன்ற பணிகளுக்காக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரிந்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் தினந்தோறும் பள்ளிக்கு வருகைதர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனிலும், கல்வித் தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் விநியோகம், கல்வித் தொலைக்காட்சி வழியில் பாடம் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துதல், பள்ளி வளாகங்களை பராமரித்தல் போன்ற பணிகளுக்காக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கண்ட பணிகளை துரிதப்படுத்த அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் தினந்தோறும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள்,
இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பள்ளிக்கு வருகை தருவதில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க அரசு பரிசீலித்து வரும் நிலையில், ஆசிரியர்களை தினந்தோறும் பள்ளிக்கு வருகை புரிய உத்தரவிட்டுள்ளது பள்ளிகள் விரைவில் திறக்கப்படுவதற்கான சூழலை ஏற்படுத்தி உள்ளது.