தலித் மக்களை குறிவைத்து காய் நகர்த்தும் பாஜக...!! எல்.முருகன் நியமன பின்னணியில் இருப்பது இவர்தானா...?
தமிழகத்தில் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பாஜகவின் தலைவராக வரமுடியும் என்ற கருத்து இருந்துவந்த நிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக நியமித்து அக் கூற்றை உடைதெரிந்துள்ளது தேசிய தலைமை.
பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவராக எல். முருகனை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைமை அறிவித்துள்ளது , பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . எல். முருகன் தேசிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர் அவர் , யாருமே எதிர் பார்க்காத நிலையில் எல். முருகனை மாநிலத் தலைவராக பாஜக தேசியத் தலைமை நியமித்திருப்பது பாஜகவினர் மத்தியிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது . தமிழிசை பாஜக தலைவர் பதவியில் இருந்து விடுபட்ட நிலையில் அவரைத்தொடர்ந்து பாஜக தலைவர் பதவியைப் பெறுவதற்கு பாஜகவின் முன்னணித் தலைவர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவியது.
குறிப்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் , எச். ராஜா , சி.பி ராதாகிருஷ்ணன் , வானதி சீனிவாசன் , முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் , கே.டி ராகவன் , கருப்பு முருகானந்தம் , குப்புராஜ் ஆகியோரில் ஒருவர் பாஜகவின் மாநில தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் எல். முருகனை பாஜகவின் மாநில தலைவராக பாஜகவின் தேசிய தலைமை நியமித்துள்ளது . இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் எல். முருகன் கடுமையான போட்டிக்கு இடையே என் மீது நம்பிக்கை வைத்து பாரதி ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக என்னை அறிவித்திருக்கிறார்கள் , அதற்கேற்ப என்னுடைய பணியை நான் சிறப்பாக செய்வேன். பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் நரேந்திர மோடி , அமித் ஷா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
எல். முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார். கடந்த ஆறு மாத காலமாக மாநிலத் தலைவர் பதவியில் காலியாக இருந்து வந்த நிலையில் அதற்கு எல். முருகனை தலைவராக நியமித்திருப்பதன் மூலம் பாஜக தலைவர் பதவி குறித்து நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பாஜகவின் தலைவராக வரமுடியும் என்ற கருத்து இருந்துவந்த நிலையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக நியமித்து அக் கூற்றை உடைதெரிந்துள்ளது தேசிய தலைமை. அதேபோல் தலித் தலைவர்களின் மிக முக்கியமானவராக கருதப்படும் திருமாவளவன் போன்றோர் பாஜகவுக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை முன்வைத்து வரும் நிலையில் தலித் ஒருவரை பாஜகவின் மாநில தலைவராக நியமித்து எதிர் பிரச்சாரங்களை முறியடிக்கவும் முருகனை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மூலமாகவே பதிலடி கொடுக்கும் நோக்கில் முருகன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தலீத் மக்கள் மத்தியில் பாஜகவை கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல்.முருகனுக்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று பாஜக முன்னணி தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.