அதிமுக பொதுக்குழு வழக்கு... சசிகலா எடுத்த அதிரடி முடிவு... ஓபிஎஸ்-ஈபிஎஸ் எதிர்ப்பு..!
அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கிலிருந்து டிடிவி தினகரன் விலகியதால், நீதிமன்றத்தில் புதிதாக திருத்த மனுவை சசிகலா தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் பெங்களூரு சிறைச்சாலைக்கு செல்வதற்கு முன்பாக கட்சியின் துணை பொது செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்தார். ஆனால், அதன்பிறகு பிரிந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் அணி எடப்பாடி பழனிச்சாமியுடன் சேர்ந்தது. இதனையடுத்து நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவையும், துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து டிடிவி தினகரனையுன் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால், இந்தப் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி சசிகலாவும், டிடிவி தினகரனும் சென்னை நகர நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. சசிகலாவின் இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவுக்கு பதிலளிக்க சசிகலாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதேசமயத்தில் டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்திவருவதால், இந்த வழக்கிலிருந்து விலகிக்கொள்வதாக டிடிவி தினகரன் தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீதேவி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில், வழக்கிலிருந்து டிடிவி தினகரன் விலகிவிட்டதால், அவருடைய பெயரை நீக்கி திருத்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்தத் திருத்த மனு விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று அதிமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மனு விசாரணைக்கு ஏற்றதா என்ற விசாரணையை ஆகஸ்ட் 4-ல் நடத்துவதாகத் தெரிவித்த நீதிமன்றம், வழக்கை ஒத்தி வைத்தது.