சசிகலா அதிமுகவுக்கு துரோகம் செய்ய மாட்டார்... அடித்துச் சொல்லும் பாஜக மூத்த தலைவர்..!
அவசரப்பட்டு சசிகலா குறித்து கருத்து தெரிவிப்பது பொருத்தமானது அல்ல என என தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேசியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவசரப்பட்டு சசிகலா குறித்து கருத்து தெரிவிப்பது பொருத்தமானது அல்ல என என தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் பேசியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான இல.கணேசன் தனது சமீபத்திய பேட்டியில், ’’சசிகலா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கி, தண்டனை காலம் முழுமையாக முடிந்த பிறகு வெளியே வருகிறார்.
ஆனால் மற்ற கட்சி தலைவர்கள் அவர் வருவதை சிங்கம், புலி, கரடி கூண்டில் இருந்து தப்பித்து வெளியே வருவது மாதிரி ஒரு சித்திரத்தை உருவாக்குகின்றனர். ஜெயலலிதா மீது விசுவாசம் கொண்டவர் சசிகலா. பின்னணியில் ஆயிரம் இருந்தாலும் உண்மையிலேயே ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே இருந்த நட்பு, விசுவாசம் ஈடுசெய்ய முடியாத சிறப்பானது. அதிமுக என்ற கட்சி ஜெயலலிதா நினைவாக உள்ள கட்சி. இரட்டை இலை சின்னம், ஜெயலலிதா நினைவாக உள்ள சின்னமாகும்.
அதிமுக என்ற கட்சிக்கும், இரட்டை இலை சின்னத்துக்கும் யார் துரோகம் செய்ய நினைத்தாலும் அது மறைமுகமாக ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் தான். எனக்கு தெரிந்த இந்த விஷயம் சசிகலாவுக்கும் தெரியும். எனவே அவர் துரோகம் செய்வார் என்று ஏன் நினைக்கிறார்கள் என்பது புரியவில்லை. அவர் எதுவும் செய்யமாட்டார். எனவே அவசரப்பட்டு சசிகலா குறித்து கருத்து தெரிவிப்பது பொருத்தமானது அல்ல’’ என சசிகலாவுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.