தமிழகத்தில் பாஜகவின் அடுத்த மூவ் ! அதிமுகவுக்கு தலைமையேற்கும் மகிழ்ச்சியில் சசிகலா !!
அதிமுக மற்றும் அமமுகவை இணைப்பது குறித்து டெல்லியில் பாஜக தீவிர ஆலோசனையில் உள்ளதாகவும் இது குறித்து மேலிடம் சசிகலாவை தொடர்பு கொண்டு பேசியதால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு அதிமுக அரசு மீதான அதிருப்தியும், பாஜகவிற்கு எதிரான மனநிலையும் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது.
இதனையடுத்து அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் இரட்டை தலைமை இருக்க கூடாது என்று குரல் அதிமுக கட்சிக்குள் வெடித்தது. இந்த பிரச்சனையை உற்று கவனித்து வரும் பாஜக தலைமை. இதற்கு தீர்வு காண்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இனி வரும் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் கட்சி தலைமை வலிமையனவராக இருக்க வேண்டும் என்றும் பாஜக கருதுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் வெகு விரைவில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அறிவிப்பு வரும் என்று கூறுகின்றனர்.
இதையடுத்து சசிகலாவை விடுதலை செய்யும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளதால் சிறை நடவடிக்கைகள் வேகம் பெறும் என்றும் கூறப்படுகிறது.
சசிகலா விடுதலையானால் அதிமுக கட்சிக்கு அவரை தலைமை ஏற்க பாஜக மற்றும் எடப்பாடி தரப்பு நினைப்பதாகவும் கூறப்படுகிறது. அ.தி.மு.க. அணிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக பாஜக அணுகியிருப்பது பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே நேரததில் சசிகலா விடுதலையாகி அதிமுக தலைமை பொறுப்பை ஏற்றால் ஓபிஎஸ் தரப்புக்கு அதிமுகவில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது