500 கேள்விகள்..அசராத சசிகலா.! கோடநாடு கொலையில் யாருக்கு தொடர்பு ? வழக்கில் திடீர் திருப்பம்.!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோருக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 24-4-2017 அன்று காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண தாபா படுகாயம் அடைந்தார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இது தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் போலீசார் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் 2017ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி சேலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். மேலும் கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக வேலை செய்து வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்தநிலையில் கடந்த 15ம் தேதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டியிடம் கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் வைத்து 5 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். மறுநாள் அவரது மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, ஆறுக்குட்டியின் உதவியாளர் நாராயணன் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கோவை மாவட்ட அ.தி.மு.க ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் அனுபவ் ரவியிடம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு டிரைவர் கனகராஜ் பேசியதாக தெரிகிறது. எனவே அவரிடம் கடந்த 18ம் தேதி 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இன்று சசிகலாவிடம் சென்னையில் விசாரணை நடத்தப்பட்டது. கோடநாட்டில் இருந்த சொத்துகள் என்ன? காணாமல் போனது என்ன? போன்றவை குறித்து சசிகலாவிடம் இன்று விசாரணை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விசாரணையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க நான் எந்தவிதமான விசாரணையை எதிர்கொள்ளவும் தயார் என சசிகலா தெரிவித்துள்ளார். கோடநாடு பங்களாவில் இருந்த ஊழியர்கள் மற்றும் காவலர்கள் எத்தனை பேர்? அவர்களையெல்லாம் பணிக்கு அமர்த்தியது யார் ?பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தன உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா குறித்த ஒவ்வொரு கேள்விகளுக்கும் சசிகலா உணர்ச்சிவசப்பட்டு பதில் அளித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சசிகலாவிடம் கேட்கப்படும் கேள்விகளும், அவர் அளிக்கும் பதில்களும் முழுமையாக பதிவு செய்யப்படுகின்றன. சசிகலா வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டிருப்பதாக கூறுகின்றனர். கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் 500 கேள்விகள் கேட்கப்பட உள்ளது. கோடநாட்டில் விலை உயர்ந்த ஆபரணங்கள், ஆவணங்கள் இருந்ததான் ? இப்போது அவை யார் பொறுப்பில் உள்ளது.
அங்கிருக்கும் பணியாளர்கள் நியமித்தது, அவர்களின் தகவல் என பல கேள்விகளை போலீசார் கேட்டு வருகின்றனர். மேலும் தேவைப்பட்டால் நேரில் சென்று அவர்களுடன் கோடாநாட்டில் இருக்கும் பொருட்கள் குறித்தும் தகவல் தெரிவிக்க சசிகலா தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் சசிகலா கொடுக்கும் பதில்கள் மற்றும் தகவல்கள் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.