முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5 ஆம் நினைவுதினத்தையொட்டி அஞ்சலி செலுத்திய அதிமுக முன்னாள் பொதுசெயலாளர் சசிகலா, ஒரே அணியில் ஒற்றுமையாக நின்று அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெல்ல வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 5 ஆம் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக முன்னாள் பொது செயலாளர் வி.கே.சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த காரில் வந்த அவர், ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதோடு ஓர் அணியில் நின்று ஒற்றுமையோடு இணைந்து அனைத்து தேர்தல்களையும் வெல்ல வேண்டும் என கண்கலங்கி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இதுபோன்று , அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனும் தனது ஆதர்வாளர்களுடன் வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி உட்பட பலரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுகவில் அரங்கேறும் குழப்பங்களும் பிரச்சனைகளும் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது. இரட்டை தலைமை கீழ் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது என்று கட்சி தலைவர்கள் சொன்னாலும் ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சனையால் அதிமுக ஆட்டம் கண்டுதான் கொண்டிருக்கிறது. விடுதலைக்கு பின் சசிகலா, சைலண்ட் மோடில் இருந்தாலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததால், அவர் அதிமுக கைப்பற்றும் நோக்கில் அரசியலில் ரீ எண்ட்ரீ கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

அவ்வப்போது கட்சி நிர்வாகிகளுடன் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தென்மாவட்டங்களில் அரசியல் சுற்று பயணமும் மேற்கொண்டார். இந்த நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக தேர்தல் விதிகளில் மாற்றம் கொண்டுவந்து, அடிப்படை உறுப்பினர்களால் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, பொதுச்செயலாளர் அதிகாரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு கொடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் ,எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு வாங்க வந்த வடசென்னை சேர்ந்த மூத்த அதிமுக நிர்வாகி ஓமப்பொடி பிரசாத் சிங், கட்சியிலிந்து நீக்கம் செய்யப்பட்ட புகழேந்தி ஆதரவாளர்களுக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே மோதம் உருவானது. இதனையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் அதிமுக சார்பில் புகார் மனு கொடுக்கபட்டது.
இந்நிலையில் நேற்று சசிகலா வெளியிட்ட அறிக்கையில், அதிமுக தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும், ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும் நம் இரும்பெரும் தலைவர்களின் தலைமையில் செயல்பட்டு வந்தது. நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் பார்த்து பொறாமை படும் அளவுக்கு ஒளிர்ந்த நம் இயக்கத்தின் இன்றைய நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும் வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தொண்டர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின் மீது விழுந்த அடியாகவும், என் மீது விழுந்த அடியாகவும் தான் நான் நினைக்கிறன்.ஒரு தலைமையால்தான் அந்த வலியை உணரமுடியும். ஆணிவேரான தொண்டர்கள் இருந்தால்தான் இந்த இயக்கம் ஆலமரமாக தழைத்தோங்கும். இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்து, நம் தலைவர்கள் காட்டிய வழியில், ஒற்றுமையுடன் இருந்தால் தான் வரும் நாட்களில், நம் எதிரிகளை வெல்ல முடியும் என்று சூசமாக ஒரே அணியில் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தார்.
