Sami darshan with Dinakaran family

வருமான வரித்துறையின் தொடர் சோதனை நடைபெற்று வரும் நிலையில், டிடிவி தினகரன் தனது குடும்பத்தாருடன் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள கோயில் ஒன்றுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட 187 இடங்களில் கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், ஆயிரம் கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருமான வரித்துறையின் சோதனை குறித்து டி.டி.வி.தினகரன், ரெய்டுக்கு மத்திய அரசு, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர்தான் காரணம் என குற்றம்சாட்டினார். இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். 

சசிகலா, தினகரன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் நாள் வருமான வரித்துறை சோதனையின் போது, டி.டி.வி.தினகரன், தமது வீட்டில் கோபூஜை நடத்தினார். வருமான வரித்துறை சோதனை நடத்தப்படும் நிலையில், தினகரன் ரொம்ப கூலாகவே கோ பூஜையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இன்று 4-வது நாளாக வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்று வருகிறது. இவ்வளவு பரபரப்புக்கிடையே, டிடிவி தினகரன் தனது குடும்பத்தாருடன் விழுப்புரத்தில் உள்ள கோயில் ஒன்றுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். 

வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வரும் வேளையில், இன்று காலை டிடிவி தினகரன் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள செம்மேடு கிராமத்துக்கு சென்றார். அங்கு அமைந்துள்ள கோயில் ஒன்றில், தினகரன், அவரது மனைவி, மகளுடன் சாமி தரிசனம் செய்தார்.