BREAKING சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடையில்லை.. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், அரசு கையப்படுத்திய நிலங்கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், அரசு கையப்படுத்திய நிலங்கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.
சேலம்-சென்னை இடையே சாலை போக்குவரத்தை மேம்படுத்த அதிவிரைவு சாலைகள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன. மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த 8 வழிச்சாலை திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இதனால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே, 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் சார்பில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து, கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 2ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடையில்லை. ஆனால், அரசு கையப்படுத்திய நிலங்கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும். சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறாமல் நிலத்தை கையப்படுத்தியது தவறு. திட்டத்தை செயல்படுத்த உரிய வழிமுறைகளை கடைபிடிப்ப வேண்டும் கூறி புதிய அறிவிப்பாணை வெளியிட்டு சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. புதிதாக சாலை அமைக்க மத்திய அரசுக்கும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் அதிகாரம் உள்ளதாக தெரிவித்தனர். மேலும், நிலம் கையகப்படுத்தலுக்கான சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும் என உறுதிப்படுத்தியுள்ளது.