saidapet mla subramanian won international award

மாரத்தான் போட்டிகளில் பல சாதனைகள் படைத்து வரும் திமுகவைச் சேர்ந்த சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியனுக்கு உலக ரெக்கார்டு யூனியன் சார்பில் சர்வதேச கோல்டன் டிஸ்க் விருது வழங்கப்பட்டது.

சென்னை முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன், மாரத்தான் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். 

சமூகப் பிரச்னைகளை முன்வைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நடந்த 63 மாரத்தான் போட்டிகளில் இதுவரை கலந்துகொண்டு ஓடியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தொடர்ந்து பல இடங்களில் நடக்கும் 21.1 கி.மீ தூர மாரத்தானில் கலந்துகொண்டு சாதனை படைத்துவரும் மா.சுப்பிரமணியனுக்கு உலக ரெக்கார்டு யூனியன் சார்பில் சர்வதேச கோல்டன் டிஸ்க் விருது டெல்லியில் வழங்கப்பட்டது. இந்த விருதை இங்கிலாந்து சிறப்பு விருந்தினர் தாம்ஸ்பெயின் வழங்கினார்.

விழாவில் பேசிய மா.சுப்பிரமணியன், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட என் வாழ்க்கை 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைப்பயிற்சி, உணவுப் பழக்கம், மாத்திரைகள் என நகர்ந்தது. 2013-ல் ஓடத் தொடங்கி, 2014-ல் 21.1. கி.மீ. மாரத்தானில் ஓடினேன். இதில் கிடைத்த நம்பிக்கையால் மாரத்தானில் தொடர்ந்து சாதனை புரிய முடிந்தது. 

கடந்த 3 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட மாரத்தான் போட்டிகளில் ஓடியுள்ளேன். அடுத்த 2 ஆண்டுகளில் 50 மாரத்தானில் ஓடவுள்ளேன் என்றார்.