யாருக்கு, எதன் அடிப்படையில் ஓட்டு போடணும்..? சத்குரு ஓபன் டாக்
சாதி, மதம், கட்சி பேதமெல்லாம் பார்க்காமல் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக யார் சிறப்பாக உழைப்பார்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு வாக்களிக்குமாறு சத்குரு கருத்து தெரிவித்தார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் காலை 7 மணி முதலே பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர்.
தமிழ்நாட்டில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. சத்குரு கோவை முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சத்குரு, தேர்தல் என்பது வெறும் நிகழ்ச்சியோ அல்லது விடுமுறை தினமோ அல்ல. மனித வரலாற்றில், வன்முறையோ கலவரமோ போராட்டமோ இல்லாமல், ஆட்சி மாற்றத்தை ஏற்பத்தும் ஒரு நிகழ்வு. வாக்குரிமை என்பது தனிமனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள மரியாதை. எனவே அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அனைவருக்கும் ஒரே ஒரு ஓட்டுதான் உள்ளது. அனைவரும் சமம் என்பதை உணர்த்துவது ஓட்டுரிமை. எனவே அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.
சாதி, மதம், கட்சி ஆகியவற்றை பொறுத்து வாக்களிக்காமல், தமிழ்நாட்டை யார் முன்னேற்றுவார்கள், மக்களுக்கு தேவையானதை செய்துகொடுப்பார்கள் என்று நீங்கள் உணர்கிறீர்களோ, அவர்களுக்கு வாக்களியுங்கள் என்று சத்குரு கூறினார்.
தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களின் நிர்வாகத்தை பக்தர்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி கோவில் அடிமை நிறுத்து என அவர் தொடங்கிய இயக்கத்திற்கு 3 கோடிக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த சத்குரு, அனைத்து கட்சிகளுமே இதைப்பற்றி பேசியிருக்கிறார்கள். முக்கியமான இரண்டு கட்சிகள் கோவில்களை புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார்கள். ஆனால் அதுமட்டும் போதாது. அரசு அதிகாரிகளை வைத்து கோவில்களை நிர்வகிப்பது சரியாக வராது. அரசால் கட்டிடங்களை சரி செய்ய முடியுமே தவிர, பக்தர்களால் மட்டுமே, கோவில்களை உயிரோட்டமாக வைத்திருக்கவும், சிறப்பாக நிர்வகிக்கவும் முடியும் என்றார் சத்குரு.