சபரிமலை பிரச்சனையைக் கண்காணிக்க நால்வர் குழு !! அதிரடியாக களத்தில் இறங்கிய பாஜக!!
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த கேரள அரசு முயற்சி செய்து வரும் நிலையில் பாஜக, ஆர்.எஸ்எஸ். போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அங்கு நிலவும் சூழல் குறித்து நேரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, நான்கு பேர் குழுவை, பாஜக தலைமை, சபரிமலைக்கு அனுப்பி வைத்துள்ளது
கேரளாவில், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இந்த மாநிலத்தில் உள்ள, 'சபரிமலை அய்யப்பன் கோவிலில், அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, பெண்கள் சிலர், கோவிலுக்கு செல்ல முற்பட்டனர்.
இதனால், கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெண்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக, சபரிமலை நடை மீண்டும் திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இதையடுத்து, சபரிமலையில் உள்ள நிலவரம் குறித்து நேரில் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க, நான்கு பேர் குழுவை நியமித்து, பாஜக தேசிய தலைவர், அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
பா.ஜ., பொதுச் செயலர் சரோஜ் பாண்டே, கட்சியின் தலித் பிரிவு தேசிய தலைவர், வினோத் சோன்கர், எம்.பி.,க்கள், பிரகலாத் ஜோஷி, நலின் குமார் ஆகியோர் அடங்கிய, நால்வர் குழுவை அமைத்து, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
இந்த குழுவினர், சபரிமலைக்கு வரும் பக்தர்களிடம், கருத்து கேட்டு, அங்குள்ள நிலவரத்தை நேரில் ஆய்வு செய்து, கட்சித் தலைமைக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என பாஜக அறிவித்துள்ளது.