ரம்மியை ஊக்குவிக்கும் முழுக்கள் பாடத்தை மாற்றியமைத்தால் மட்டும் போதாது. சீட்டுக்கட்டுகளுடன் கூடிய அந்தப் பாடம் மாணவர்களின் கண்களில் படக் கூடாது. 

ஆறாம் வகுப்பு கணிதப் பாட நூலில் சீட்டுக் கட்டுகளைக் கொண்டு ரம்மி ஆட்டத்தை எவ்வாறு விளையாடுவது என்பது குறித்து விளக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் புகார் கூறியுள்ளார்.

கணக்கு பாடத்தில் ரம்மி

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி தற்கொலை செய்துகொள்வோர் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டை ரத்து செய்ய வலுவான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆறாம் வகுப்பு கணித பாட நூலில் சீட்டுக்கட்டு விளையாட்டை பற்றி இடம் பெற்றிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக மாநில பாடத் திட்டத்தின் ஆறாம் வகுப்பு கணிதப் பாட நூலில் முழுக்கள் என்ற தலைப்பிலான பாடத்திட்டத்தில் சீட்டுக் கட்டுகளைக் கொண்டு ரம்மி ஆட்டத்தை எவ்வாறு விளையாடுவது என்பது குறித்து விளக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ரம்மியை பாடத்தில் வைப்பதா?

இது மாணவர்களைச் சீரழித்து விடும். முழுக்கள் என்ற பாடத்தின் நோக்கம் எண்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்குவதாக இருக்கலாம். ஆனால், அதற்கு நல்ல உதாரணங்கள் ஏராளமாக இருக்கும் நிலையில், ரம்மி ஆட்டத்தை எடுத்துக்காட்டாக வைத்திருப்பது தவறு. இது மாணவர்களுக்கு எண்களை கற்றுத் தராது; ரம்மியைத்தான் கற்றுத் தரும். ஆன்லைன் ரம்மி ஆட்டம் இளைய சமுதாயத்தை சீரழித்து தற்கொலைக்கும், கொலைகளுக்கும் வழி வகுத்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், இந்தப் பாடம் சீரழிவை மேலும் அதிகரிக்கச் செய்யும். மானவர்களுக்கு நன்மையை போதிக்க வேண்டிய பாட நூல்கள் தீமையைப் போதிக்கக் கூடாது. 

அன்புமணி கண்டனம்

ரம்மியை ஊக்குவிக்கும் முழுக்கள் பாடத்தை மாற்றியமைத்தால் மட்டும் போதாது. சீட்டுக்கட்டுகளுடன் கூடிய அந்தப் பாடம் மாணவர்களின் கண்களில் படக் கூடாது. அதற்காக இப்போது வரும் கல்வியாண்டுக்கு அந்தப் பாடம் இல்லாத புதிய பாட நூல்களை அச்சிட்டு வழங்க அரசு முன்வர வேண்டும்” என்று அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.