rknakar module is bright chance of winning the DMK - Stalins hope
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கண்டிப்பாக வெற்றி பெரும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி, தீபா அணி, திமுக என பல்வேறு கட்சிகள் போட்டியிட உள்ளன.
சசிகலா தரப்பில் வேட்பாளர் குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும் என அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ் தரப்பில் அதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் விரைவில் ஓ.பி.எஸ் அறிவிப்பார் எனவும் ஓ.பி.எஸ் ஆதரவாளர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
திமுக தரப்பில், யாரை வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்பதற்கான நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தீபா தரப்பில் தீபாவே ஆர்.கே.நகரில் நிற்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், திமுக செயல் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
ஜெயலலிதா காலமாவதற்கு முன்பிருந்தே தண்ணீர் பஞ்சம் ஆரம்பமாகி விட்டது.
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் பினாமி ஆட்சி தண்ணீர் தட்டுபாடு பற்றி கவலைப்படவில்லை.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
தங்கச்சிமடத்தில் போராடும் மீனவர்களுக்கு நாளை நேரில் சென்று ஆறுதல் கூறுவேன்.
மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண திமுக போராடும்.
செம்மர கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
