எல்லாம் தினகரன்தான்... அமைச்சர் கார் கண்ணாடி படீர் படீர்...
சென்னை ஆர்.கே.நகரில் தேர்தல் நிலவரம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. இன்றுதான் வெளிப்படையாக பண விநியோகம் குறித்த தகவல்கள் வெளியாகின. பண வினியோகத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீஸார் கையுடன் பிடித்தனர். இன்னும் 3 நாட்களே உள்ளதால், கடைசி கட்ட பிரசாரத்தில் உள்ளனர் கட்சியினர். எனவே, பணப் பட்டுவாடாவும் ஜரூராக நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று ஆர்.கே.நகர் வஉசி நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக, தினகரன் ஆதரவாளர்கள் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே வ.உசி. நகரில்தான் இன்று காலை பண விநியோகத்தில் ஈடுபட்டதாக, ஒருவர் பிடிபட்டார். அதே நேரத்தில் காலை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனிடையே, இந்தக் குழப்பங்களுக்கு டிடிவி தினகரனின் ஆட்களே காரணம் என்று அதிமுக.,வினர் புகார் கூறினர்.
திமுக.,வுடன் தினகரன் கூட்டு வைத்திருக்கிறார் என்று அதிமுக.,வினர் மட்டுமல்ல, முதல்வர் எடப்பாடியே வந்து பிரசாரத்தின் ஈடுபட்டபோது வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
ஆனால், அதிமுக.,வினர் தான் ரூ.6 ஆயிரம் ஒரு ஓட்டுக்கு என்று அளித்து வருகிறார்கள் என்று திமுக.வினரும் தினகரன் தரப்பினரும் புகார் கூறுகின்றனர்.
இத்தகைய சூழலில், பண விநியோகம், வன்முறை, அதிகாரிகளையே முற்றுகையிட்டு அச்சுறுத்துவது என எல்லாவித முறைகேடுகளும் நடப்பதால், எல்லாம் உறுதிப்படுத்தப் பட்டால், ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்துவதை இம்முறையும் தள்ளி வைக்கப்படும் என்று தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ரா கூறியுள்ளார்.