நடிகரும் முன்னாள் எம்.பியுமான ரித்தீஷ் மரணமடைவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுடன் தனது இல்லத்தில் உணவு சாப்பிட்ட புகைப்படம் வெளியாகி அவரது உறவினர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது.
நடிகரும் , முன்னாள் தி.மு.க. எம்.பி.யான ஜே.கே. ரித்தீஷ் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 46 .
இலங்கை கண்டியில் பிறந்தவரான இவருக்கு கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகன் உள்ளார்.
ராமநாதபுரத்தில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த கானல்நீர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து மக்களிடையே அறிமுகம் ஆனபின் நாயகன், பெண் சிங்கம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக எல்.கே.ஜி. என்ற படத்தில் நடித்துள்ளார்.

தி.மு.க.வில் இருந்த அவர் கடந்த 2014ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்து அக்கட்சியின் முதன்மை உறுப்பினரானார். இந்நிலையில், உடல்நல குறைவால் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் திடீரென அவர் காலமானார். அவரது உடல் அவரது சொந்த ஊரான மணல்மேல்குடியில் நாளை தகனம் செய்யப்படுகிறது.

சென்னையில் வசித்து வந்த ரித்தீஷ் ராமநாதபுரம் தொகுதி பாஜக வேடபாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து கடந்த 10 நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று மதியம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு ரித்தீஷ் தனது இல்லத்தில் விருந்த அளித்தார். இதையடுத்து அவர்களுடன் பேசி வழியனுப்பி வைத்த சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமடைந்தார்.
தற்போது ஜே.கே.ரித்தீஷ் அமைச்சருடன் அமர்ந்து உணவு அருந்திய புகைப்படம் வெளியாகி அவரது உறவினர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது.
