நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் இயற்றுவது எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்..!
கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் ஒப்புக்கு தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பி, அவரிடத்தில் எந்தவிதமான அழுத்தமும் தராமல் விட்டுவிட்டனர். அதுபோலன்றி, நிச்சயம் முதலமைச்சர் இந்த தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி, போதுமான அழுத்தம் தந்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவார்.
நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை மறுநாள் தீர்மானம் நிறைவேற்றப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த திமுக தேர்தல் வாக்குறுதியில் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்திருந்தது. திமுக ஆட்சியமைத்திலிருந்து பல்வேறு அரசியல் தரப்பினரும் நீட் தேர்வு தொடர்பான திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் சென்னை பெரும்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்;- தமிழக அரசு விரும்பாத, தமிழக முதலமைச்சரின் மனதுக்கு ஒப்புதல் இல்லாத நிகழ்வாகத்தான் நீட் தேர்வு நடக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், சட்டமன்ற முதல் கூட்டத்தொடரின் கடைசி நாளான 13ம் தேதி நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதைப்போல, அந்த தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் ஒப்புக்கு தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பி, அவரிடத்தில் எந்தவிதமான அழுத்தமும் தராமல் விட்டுவிட்டனர். அதுபோலன்றி, நிச்சயம் முதலமைச்சர் இந்த தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி, போதுமான அழுத்தம் தந்து தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.