மாணவர்களுக்கு பயன்படும் வகையில் 4G,5G மாதம் 10GB பதிவிறக்கம் செய்ய வசதியுடன் கூடிய, இணையதள இணைப்புடன் கைக்கணினி (Tablet) அரசு செலவில் வழங்கப்படும். அதோடு அனைத்து கல்வி நிலையங்களிலும் Wi-Fi வசதி செய்து கொடுக்கப்படும் என்ற திமுக தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி என்ன ஆனது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கை
மாணவர்கள் பயனடையும் வகையில் வழங்கப்பட்டு வந்த மடிக்கணினியை முடக்கிய தமிழக அரசு டேப்லெட் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தாமல் உள்ளதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தேர்தல் அறிக்கை கானல் நீராக உள்ளது, குறிப்பாக இளைஞர்கள், மாணவர்களுக்கு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை அறிவிப்புகள் கானல்நீராக உள்ளது. திமுகவின் 163 வது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் மேல்நிலைபள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் 4G,5Gயுடன் மாதம் 10GB பதிவிறக்கம் செய்ய வசதியுடன் கூடிய, இணையதள இணைப்புடன் கைக்கணினி (Tablet) அரசு செலவில் வழங்கப்படும். அதோடு அனைத்து கல்வி நிலையங்களிலும் Wi-Fi வசதி செய்து கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் 505 தேர்தல் வாக்குறுதியில் கூறிய அனைத்தையும் போல் இதுவும் கானல் நீராக உள்ளது.

ஜெயலலிதா தொடங்கிய திட்டம்
இளைய சமுதாயத்தினுடைய எதிர்கால கணினி அறிவை, இந்த கணினி யுகத்தை முன்கூட்டியே எதிர்கொள்வதற்காக பள்ளி,கல்லூரியில் ,பாலிடெக்னிக் படித்த மாணவர்களுக்கு 2011ம் ஆண்டு மடிக்கணினி வழங்குகிற ஒரு மகத்தான திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து கணினியில் புரட்சி செய்தார். கடந்த பத்து ஆண்டுகளில் 53 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. குறிப்பாக கொரோனா காலத்திலே கூட அந்த மடிக்கணினி உற்பத்தி பல்வேறு சவால்களுக்கு நடுவில் அதை பெற்று தந்து சாதனை வரலாறு படைத்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்தநிலையில் மடிக்கணினி இரண்டு ஆண்டு காலம் வழங்கவில்லை என்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் கேள்வி எழுப்பினார். அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்றாலும், நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்கிற கவலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.

டேப்லெட் திட்டம் என்ன ஆச்சு.?
இன்றைக்கு எல்லாம் கணினி யுகமாக இருக்கிறது. ஆன்லைனில் தான் இன்றைக்கு அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த கணினி யுகத்தில் இளைய சமுதாயத்தை அரசு பள்ளியில் படிக்கிற ஏழை எளிய மாணவர்கள் , மரத்தடியில் இருந்த மாணவர்களுக்கு மடிகணினி தந்து ஒரு வரலாற்று புரட்சி செய்தவர் ஜெயலலிதா இன்றைக்கு மாணவர்களுக்கு அதிமுக வழங்கிய மடிக்கணினியை வழங்கவில்லை ,திமுக சொன்ன டேப்லெட் (Tablet) திட்டத்தையும் வழங்கவில்லை. எடப்பாடியார் ஆட்சி காலத்தில் தாய்த்தமிழ் நாட்டில் 7சட்டக் கல்லூரிகள், 21 பல்கலை தொழில்நுட்பக் கல்லூரிகள், 5 கால்நடை கல்லூரிகள், 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 11 அரசு மருத்துவகல்லூரிகளை ஒரே ஆண்டில் பெற்றுத் தந்து ஒரு எளிய முதல்வராக சாமானிய முதல்வராக எடப்பாடியார் இன்றைக்கு அந்த சரித்திர சாதனை படைத்திருக்கிறார்.

இந்தநிலையில் எப்போது மாணவர்களுக்கு மடிக்கணினியை இந்த அரசு கொடுக்கும் என மாணவர்கள் கவலையோடும், கண்ணீரோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவ செல்வங்களுக்கு மடிக்கணினி வழங்கி கல்வி அறிவை வளர்ப்பதற்கு இந்த அரசு முன்வருமா ? என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்
