உங்க அக்கௌண்ட்ல ஏன் இன்னும் 15 லட்சம் போடல தெரியுமா ? மத்திய அமைச்சர் சொன்ன அதிரி புதிரி ரீசன் !!
இந்தியாவில் உள்ள அனைவரது வங்கி கணக்கிலும் விரைவில் 15 லடசம் ரூபாய் வந்து விழும் என்றும், தற்போது ரிசர்வ் வங்கியில் பணம் இல்லாததால் தான் லேட் ஆவதாகவும் மத்திய அமைசச்சர் ஒருவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார்.
2016-ம் ஆண்டு கறுப்பு பணத்தை மீட்பதற்காக பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் என்பது தொடர்பாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 2019 தேர்தலும் விரைவில் வரவிருக்கிறது.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில செயலாளரின் உறவினர் ஒருவர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதற்காக ராமதாஸ் அத்வாலே அந்த வீட்டுக்குச் சென்றார். சென்றார்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே , ஐந்து மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட செல்வாக்கு சரிவு தொடர்பாக கூட்டணி கட்சிகள் கவலை கொள்ளத் தேவையில்லை என தெரிவித்தார்.
வரும் தேர்தலிலும் பிரதமர் மோடியை முன்வைத்து பாஜக கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும், மகாராஷ்ட்ராவில் பாஜகவுடன் சிவசேனா மீண்டும் கைகோர்க்க வேண்டும் என்றும் அத்வாலே தெரிவித்தார்.
அனைவரின் வங்கி கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்ற பிரதமர் மோடியின் உறுதிமொழி குறித்து அவர் பேசுகையில், ரிசர்வ் வங்கியில் அவ்வளவு தொகை இல்லாததால்தான் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என கூலாக கூறினார்.
அதே நேரத்தில் . வெகு விரைவில் அனைவரின் வங்கி கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என ராமதாஸ் அத்வாலே குறிப்பிட்டார். இதைக் கேட்ட அனைத்து பத்திரிக்கையாளர்களும் சிறிது நேரம் அப்படியே அசந்து போயினர்.