ராணுவ வீரர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர் மனோகர் பாரிக்கர்…. பாஜக எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் புகழாரம் !
ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பிரச்சனைகளை கேட்டு அதற்கு தகுந்த ஆலோசனை வழங்குவதில் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் மறைந்த கோவா முதலமைச்சருமான மனோகர் பாரிக்கருக்கு நிகரானவர் யாரும் இல்லை என அவருக்கு பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைந்து விட்டார் என்ற செய்தி நான் எதிர்பார்த்ததுதான் என்றாலும் என்னை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சில மாதங்களாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாலும், பார்ப்பதற்கும் பழகுவதற்கும் அவர் மிக எளிமையானவர் என ராஜீவ் குறிப்பிட்டுள்ளார். பாரிக்கரை கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் எனக்கு தெரியும். மோடியை பிரதமராக முன்மொழிந்த தலைவர்களில் மிக முக்கியமானவர் பாரிக்கர்.
நான் அவரை சந்தித்த முதல் சந்திப்பதிலேயே அவர் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார். மிக மிக எளிமையான அதே நேரத்தில் மிகுந்த புத்திசாலியாகவும், கூர்மையான அறிவுத் திறன் மிகுந்தவராகவும் இருந்தவர் பாரிக்கர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
நான் மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையிலும், விமானப் படை அதிகாரியின் மகன் என்ற முறையிலும் ராணுவ வீரர்களின் பிரச்சனைகள், ஒரு பதவி ..ஒரு ஓய்வூதியம், போரினால் விதவையானவர்கள், போரில் காயமடைந்து உறுப்புகளை இழந்தவர்கள் குறித்து நான் எப்போதும் பேசி வருகிறேன்.
மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ராணுவ விரர்கள் மற்றும் அவர்களது குடும்பிதிதினர் பிரச்சனைளகள் குறித்து அவரிடம் பேசினேன். இதையடுத்து அப்பிரச்சனையில் மனோகர் பாரிக்கர் நேரடியாக தலையிட்டு அதற்கு தீர்வு கண்டார்.
ஒரு பதவி ஒரு ஓய்வூதியம் என்ற 42 ஆண்டுகள் தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனையை ஒற்றை ஆளால் கோப்புகளை திரட்டி அதை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்று 35 ஆயிரம் கோடி ரூபாயை பெற்றுத் தந்தவர் மனோகர் பாரிக்கர் என்றும் ராஜீவ் சந்திரசேகர் புகழ்ந்து பேசினார்.
இதே போல் மாநிலங்களவையில் எனது தனிப்பட்ட மசோதாக்களை எனக்கு தெரியாமல் விவாதத்துக்கு கொண்டு வந்து எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தவர் மனோகர் பாரிக்கர் என்று பெருமை சூட்டினார்.
தற்போது அவரது மறைவு எங்கள் அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. ராணுவ வீரர்கள் சார்பில் மறைந்த அந்த மாபெரும் மனிதருக்கு ஒரு ராயல் சல்யூட் என ராஜிவ் தெரிவித்துள்ளார்,
உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் சார் !! என பாஜக எம்.பி. ராஜீவ் சந்திர சேகர் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்