DMK: இது சும்மா டிரெய்லர் தான்.. இனிமே தான் ஆட்டமே இருக்கு.. முன்னாள் அமைச்சர்களை அலறவிடும் இன்னாள் அமைச்சர்.!
அதிமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். திமுக தேர்தல் வாக்குறுதியாக ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத் துறையின் ரெய்டு வரிசையில், 5வது அமைச்சராக அதிமுக முன்னாள் அமைச்சரான தங்கமணி தொடர்புடைய இடங்களில் கடந்த டிசம்பர் 15ம் தேதி சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து இரண்டாவது முறையாக நேற்று அவருக்குச் சொந்தமான 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சில முக்கிய ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சிக்கிய ஆவணங்களைக் கொண்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் 12வது முகாமில் அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது சிக்கிய ஆவணங்களைக் கொண்டு லஞ்ச ஒழிப்புத் துறை ரகசிய ஆய்வு நடத்தி வருகிறது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் திமுக கொடுத்த புகார் பட்டியலின் அடிப்படையிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. எனவே சட்ட நடவடிக்கைகளிலிருந்து அவர்கள் தப்பமுடியாது. அவர்கள் மீது விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.