ராகுலின் விசிட்டை பிசுபிசுக்க வைத்த எடப்பாடி: பின்னணியில் பி.ஜே.பி.
ஒகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை ஒரு வழி பண்ணியெடுத்து பத்து நாட்களுக்கும் மேல் ஆன பிறகுதான் தமிழக முதல்வர் அங்கே சென்று பார்வையிட்டார்.
இத்தனை நாள் கழிச்சு இம்புட்டு அவரசரமாக அவர் அங்கே செல்லக்காரணமே! ராகுலின் விசிட்தான் எனும் ரகசியம் இப்போது கசிந்திருக்கிறது.
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியோ பிஸியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் கடந்த 14-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்று புயலால் சிதைக்கப்பட்ட மக்களை சந்தித்தார்.
ராகுல் அங்கு வரப்போகும் தகவல் 10-ம் தேதி வெளியானது. இந்நிலையில் அது நாள் வரை கன்னியாகுமரிக்கு வராமல் சேலம், கோயமுத்தூர், சென்னை என்று சுற்றிக் கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடுதிப்பென கன்னியாகுமரிக்கு சென்றார். ஐந்து மணி நேரம் அங்கிருந்தவர் தூத்தூர் பகுதியில் மீனவர்களை சந்தித்தார்.
இறந்த மீனவர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் உள்ளிட்ட பல நிவாரண அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் மூலம் மீனவர்களின் கொதிப்பு ஓரளவு அடங்கியிருந்தது.
இந்நிலையில் ராகுல்காந்தியின் குமரி விசிட்டை டம்மியாக்கிடவே டெல்லி லாபி தமிழக முதல்வரை ‘உடனடியாக கிளம்பிச் செல்லுங்கள்’ என்று முடுக்கிவிட்டது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
”சரியான நிவாரணம் கிடைக்காததால் கொதிப்பிலிருக்கும் மீனவ மக்கள் ராகுலை கண்டதும் கதறிக்கூப்பாடு போட்டு அவரிடம் மாநில மற்றும் மத்திய அரசுகளைப் பற்றி கொட்டித்தீர்த்தால் அந்த விஷயம் மீடியா வழியே தேசமெங்கும் பரவும். கதறும் மக்களைக் கட்டிப்பிடித்து ராகுலும் ஆறுதல் சொல்ல வாய்ப்பிருக்கிறது.
இந்த விஷயம் குஜராத் தேர்தலில் ராகுலுக்கு ஆதரவாக சில விளைவுகளை உருவாக்க வாய்ப்பிருக்கிறது! என எண்ணிப் பயந்தது டெல்லி. உடனேதான் தமிழக முதல்வரை களமிறக்கியது.” என்கிறார்கள் விமர்சகர்கள்.
முதல்வர் வந்து மீனவர்களுக்கு ஆதரவான அறிவிப்புகளை செய்துவிட்டு போனதால்தான் ராகுல் வந்தபோது பெரிதாய் மக்கள் கூடி பரபரப்பு நிகழவில்லை. ராகுலின் குமரி விசிட் பிசுபிசுக்க காரணமே இந்த முன்னேற்பாடுதானாம்.
அரசியல்டா!