கன்னியாகுமரியில் களம் இறங்கும் ராகுல் காந்தி …. அமேதி இல்லாமல் தமிழகத்திலும் போட்டி !!
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதி மட்டும் அல்லாமல் தமிழகத்தில சிவகங்கை அல்லது கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர். தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேச்சு வார்த்தை என அரசியல் கட்சிகள் கனஜோராக களம் இறங்கிவிட்டன.
பிரதமர் மோடி கேரள மாநிலம் கொல்லத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளார். அவர் இந்த முறை வாரணாசி தொகுதியில் போட்டியிடுவாரா? அல்லது வேறு தொகுதி மாறுவரா? என்பது இது வரை அறிவிக்கப்படவில்லை.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை சோனியா உத்தரபிரதேச மாநிலம் ரேபரலி தொகுதியிலும், ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி அமேதி தொகுதி மட்டுமல்லாமல் தமிழகத்தில் சிவகங்கை அல்லது கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்து வருவதாகவும் எந்தத் தொகுதி என்பது விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.