மாணவர்களின் விடுமுறை கனவுகளை இப்படி கசக்கி எறிந்துவிட்டால்  கற்பதில்  அவர்களுக்கு ஆர்வம் எப்படி வரும்.? 

தேர்வுகளை மாணவர்கள் ஆர்வமாக சந்திப்பதற்கு காரணம், தேர்வுக்குபின்னர் விடுமுறை கிடைக்கும் அப்போது வெளியூர்களுக்கு சென்று மகிழ்ச்சியாக சுற்றிவரலாம் என்ற உற்சாகமே அதற்கு முதற்காரணம், அப்படியிருக்கையில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு நெருங்கியுள்ளது, வெளியூர் பயணங்களுக்கு மாணவர்கள் இப்போதே திட்டமிட்டுவிட்டனர். இந்த நிலையில் அரசின் சில தீடீர் உத்தரவுகளால் அவர்களுக்கு காலாண்டு விடுமுறை கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளது, எந்த சிக்கலாக இருந்தாலும் வழக்கமாக மாணவர்களுக்கு வழங்கும் விடுமுறையை இந்த ஆண்டும் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் செயல்முறைகள் அறிக்கை 09.09.2019 ன்படி மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்தநாள் நினைவு விழாவினை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு அனைத்துவகைப் பள்ளிகளிலும் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை மற்றும் காந்திய மதிப்புகளை மையமாக வைத்து 23.09.2019 முதல் 02.10.2019 வரை செயல்திட்டங்கள் வழங்கி பள்ளிகளில் செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மனசு மகிழ தன் உறவுமுறைகளுடன் அன்பினை பறிமாறிக்கொள்ள திட்டமிட்டிருந்த ஆசையில் இடிவிழுந்ததைப்போல் உள்ளனர். 

மாணவர்களின் விடுமுறை கனவுகளை இப்படி கசக்கி எறிந்துவிட்டால் கற்பதில் அவர்களுக்கு ஆர்வம் எப்படி வரும்.?
அதுமட்டுமின்றி காந்தியடிகள் வாழ்க்கை முறையினையும் மதிப்புகளையும் அறிந்திட விடுமுறை காலங்களை தேர்வுசெய்தால் உண்மையாக அது உள்ளத்தில் பதியுமா என்பது கேள்விக்குறியே .மேலும் காலாண்டுத்தேர்வின் விடைத்தாள்களை திருத்தும் பணியினை ஆசிரியர்கள் விடுமுறை காலத்தைத்தான் பயன்படுத்தமுடியும் அதுமட்டுமின்றி தன் குடும்பங்களோடு வாழ்வதும் விடுமுறை காலங்களில் மட்டுமே. பெரும்பாலான ஆசிரியர்கள் சொந்த மாவட்டங்களில் பணிபுரிவதில்லை. அதற்கான வழியுமில்லை.மேலும் பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிக்கையும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் ஒரு அறிக்கையும் வெளியிடுவது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒட்டுமொத்த மாணவர்கள் பெற்றொர்கள் ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது மட்டுமின்றி மாணவர்கள் பள்ளிக்கு வந்துபடிப்பதே கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள்-ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிப்பது ஓய்வுக்காக அல்ல கற்றல் கற்பித்தலில் தங்களை புதுப்பித்துக்கொள்வதற்காகவே என்ற உளவியல் கோட்பாட்டை அறியாதது வேதனையளிக்கின்றது.மாணவர்கள் -ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் நலன்கருதி மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து பழைய நடைமுறையே தொடர்ந்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்