அடிபட்ட வலி கூட பெருசில்ல! அண்ணனுக்காக பிரச்சாரம் வரமுடியலையே!: உருகி மருகிய பெங்களூரு புகழேந்தி...
தினகரனின் வலது கரமாய் இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. தமிழ்நாட்டினுள் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்கு சென்று கட்சிப் பணியாற்ற கழகத்தினர் சோம்பேறித்தனம் காட்டி யோசித்துக் கொண்டிருந்த நிலையில் பெங்களூரு, தமிழ்நாடு, டெல்லி என்று சூறாவளியாய் சுழன்றடித்து தினகரனுக்காக கட்சிப்பணியாற்றிக் கொண்டிருந்தவர்.
தினகரன் - சசிகலா மீது எவர் விமர்சனம் வைத்தாலும் அது இருவரையும் சென்றடைவதற்குள் எங்கிருந்தோ புகழேந்தி அதற்கு பதிலடி கொடுத்திருப்பார். இப்படித்தான் தினாவின் பிரச்சார பீரங்கியாய் இருந்தவர் புகழேந்தி. அந்த வகையில் எதிரணிக்கு இவர் மீது பெரும் ஆதங்கம் உண்டு.
இந்நிலையில் சமீபத்தில் திண்டுக்கல் அருகே கார் விபத்தில் சிக்கி கடும் காயமடைந்தார். மருத்துவ முதலுதவிக்காக திண்டுக்கல்லில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சில மணி நேரங்களில் கோயமுத்தூரிலுள்ள ஒரு பிரபல ஆர்தோ மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சை பெற்ற நிலையில் இப்போது மளமளவென தேறி வந்திருக்கிறாராம். இன்று அவரை நாஞ்சில் சம்பத் மற்றும் அ.தி.மு.க.வின் மாஜி முக்கிய பிரமுகர்கள் சிலர் சந்தித்து நலம் விசாரித்திருக்கின்றனர்.
அப்போது “ரெஸ்டு எடுங்க, ரெஸ்ட் எடுங்கன்னு எல்லாரும் சொல்லிட்டே இருப்பீங்க. ஆனா எனக்கு ஆண்டவனே ரெஸ்டை கொடுத்துட்டான். வலி கூட எனக்கு வருத்தமில்லை. ஆர்.கே.நகர் பிரச்சாரத்துல அண்ணனுக்காக நிக்க முடியலையேங்கிறதுதான் பெரிய வருத்தம்.” என்று உருகியிருக்கிறார்.
உடனே சம்பத் “நாங்க இருந்து பார்த்துக்குறோம். கவலையே வேண்டாம். அண்ணன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்ல எம்.எல்.ஏ.வா பதவியேற்று கையெழுத்து போடுறப்ப கூட நீங்களும் நிப்பீங்க. சீக்கிரம் எந்திருச்சு வந்துடுவீங்க!” என்று அவரது கரம் பற்றி ஆதரவு சொல்லியிருக்கிறார்.
தினகரனும் தொடர்ந்து போனில் நலம் விசாரித்துக் கொண்டே இருக்கிறாராம்.