முதல்வர் அறையில் 'அண்ணாமலையார்' புகைப்படம் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் அறையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பாக வெள்ள நிவாரண அறிவிப்புக்களை வெளியிட்டார்.அதன்படி, புதுச்சேரியில் சிகப்பு வண்ணத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.இதற்கான அரசாணையில் கையெழுத்து போடும் போது, அவரது அறையில் இருந்த புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி முதல்வருக்கான அலுவலகம் சட்டமன்ற வளாகத்தில் உள்ளது. இந்த அறையில் முதல்வரின் இருக்கைக்கு பின்னால் கடந்த 10 ஆண்டுகளாய் புதுச்சேரி கடற்கரையின் பழைய வரைபடம் காட்சிக்கு இருந்தது. புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி 2021 மே 7ம் தேதி பதவி ஏற்றதும் அவரது அறை மாற்றி அமைக்கப்படவில்லை. ஆன்மீகத்தில் அதிக நாட்டமுள்ள ரங்கசாமி அடிக்கடி திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வருகிறார் என்றும் கூறுகின்றனர். அதன் பின்னர், அவரது ஆன்மீக குருவான சித்தர் அப்பா பைத்தியம் சாமிகளின் படம் அங்கு வைக்கப்பட்டது. தற்போது அந்த படம் மாற்றப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையின் கோபுரங்கள் மற்றும் தீபம் எரியும் மலையுடன் கூடிய இந்த வரைபடம் நேற்று மாற்றப்பட்டது. திருவண்ணாமலைக்கு முன்னால் ரங்கசாமி உட்கார்ந்து இருப்பது போல் இருக்கிறது. ஒவ்வொரு கார்த்திகை தீபத்துக்கு திருவண்ணாமலைக்கு சென்று அவர் தீப தரிசனம் செய்வது வழக்கம். கார்த்திகை தீபத்திருநாள் நடைபெற இருப்பதையொட்டி அவர் தனது இருக்கையின் பின்புறம் உள்ள வரைபடத்தை மாற்றி வைத்துள்ளார் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே புதுச்சேரியில் மழையால் சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25000, பாதிப்படைந்த விளை நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000, மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர், மீனவர்களின் குடும்ப அட்டைக்கு தலா ரூ.5000 நிவாரணம் அறிவித்துள்ளார் புதுச்சேரி முதல்வர்.