ஓபிஎஸ் மகனை கைது செய்ய வேண்டும்..! தேனி மாவட்டத்தில் திடீர் போராட்டத்தால் பரபரப்பு
ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவிந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த நிலையில், ஆட்டு விவசாயியை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஓபிஆரை கைது செய்யக்கோரியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மர்மமான முறையில் இறந்த சிறுத்தை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கோம்பை என்ற வனப்பகுதிக்கு அருகே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ப.ரவீந்திரநாத்திற்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. அந்த நிலங்களை சுற்றி நான்கு புறமும் சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி சோலார் மின்வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி இருந்ததாகவும், அதனை மீட்கும் முயற்சியில் பத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டபோது, வன உதவிப் பாதுகாவலர் மகேந்திரன் என்பவரை தாக்கி விட்டு சிறுத்தை காட்டுக்குள் தப்பி ஓடியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அதே இடத்தில் கடந்த 28-ம் தேதி சிறுத்தை ஒன்று உயிரிழந்து விட்டதாகவும் அதனை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின், உடனடியாக எரிக்கப்பட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தது இருந்தனர்.
ஓபிஆர் தோட்ட மேலாளர் கைது
இந்தநிலையில் 28ஆம் தேதி தோட்டத்தில் தற்காலிகமாக "ஆட்டுக்கிடை"அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் தான் சிறுத்தையை கொன்றதாக கூறி அவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த கால்நடை வளர்ப்பு சங்கத்தினர் ரவீந்திரநாத்-தின் தோட்டம் அமைந்துள்ள சொர்க்கம் வனப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில்,தோட்டத்தின் உரிமையாளர் அமைத்த மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிர் இழந்திருக்கலாம் என்றும் அதனை மறைப்பதற்காகவே நிலத்தின் உரிமையாளரும், வனத்துறையினரும் கூட்டு சேர்ந்து நாடகமாடி வருவதாக தெரிவித்தனர். இதனையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்,தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்ட மேலாளர்களாக பணிபுரியும் தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
ஓபிஆரை கைது செய்ய வேண்டும்
இந்தநிலையில் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் ஓபிஎஸ் மகனின் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நட்த்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்பாவி விவசாயியை வனத்துறையினர் கைது செய்ததைக் கண்டித்தும், நில உரிமையாளரான ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள்