உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் திமுகவுக்கு ஆதரவு... அதிமுகவுக்கு பாஜக அமைச்சர் கிடுக்குப்பிடி..!
"தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க மாட்டோம்" என மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க மாட்டோம்" என மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், ‘’உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் வெளிப்படைத்தன்மை எப்படி நிலவும்? பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய தனிச்சட்டம் இயற்ற வேண்டும். தமிழகத்தில் எந்த திட்டம் என்றாலும் கமிஷன், வசூல், ஊழலே காணப்படுகிறது’ என குற்றம்சாட்டி பேசினார்.
ஆ.ராசாவின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர், ’உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கும் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாவிட்டால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை விடுவிக்க மாட்டோம்’ எனக் கூறினார்.
முன்னதாக நேற்று தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த அக்டோபர் 31 வரை அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், பதில் மனு தாக்கல் செய்த மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை அக்டோபர் 31 வரை அவகாசம் கேட்டது. வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக உள்ளாட்சி தேர்தல் வார்டு வரையறை பணிகள் தாமதமாவதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை என்றால் உள்ளாட்சிகளுக்கான நிதியை விடுவிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.