காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்க அந்தக் கட்சி ஆர்வமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து பிரியங்கா காந்திக்கு எம்.பி. பதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் பாஜகவுக்கு தற்போது 82 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 46 உறுப்பினர்களும் உள்ளனர். மாநிலங்களவையில் இந்த ஆண்டு 68 இடங்கள் காலியாகிறது. மகாராஷ்டிராவிலும், தமிழகத்திலும் தலா 6 இடங்கள் காலியாகின்றன. இதில் மேற்கு வங்கம், பிஹாரில் தலா 4 இடங்களும், குஜராத், கர்நாடகா, ஆந்திராவில் தலா 3 இடங்களும் காலியாகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஏப்ரல் மாதம் 51 இடங்களும், ஜூன் மாதம் 5 இடங்களும், ஜூலை மாதம் ஒரு இடமும், நவம்பர் மாதம் 11 இடங்களும் காலியாகின்றன. காலியாகும் இடங்களில் காங்கிரஸ் கட்சிக்குப் பல இடங்களை இழக்க நேரிடுவதோடு மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளின் பலமும் குறையக்கூடும்.

ஏப்ரல், ஜூன் மாதங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மோதிலால் வோரா, மதுசூதன் மிஸ்த்ரி, குமார் செல்ஜா, திக்விஜய் சிங், ஹரிபிரசாத், ராஜீவ் கவுடா ஆகியோரின் பதவிக் காலம் முடிகிறது.

இதில் திக்விஜய் சிங், மோதிலால் வோரா, குமாரி செல்ஜா ஆகியோருக்கு மீண்டும் எம்.பி. பதவிக்கான வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதோடு, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜோதிர் ஆதித்யா சிந்தியா, ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோருக்கு மாநிலங்களவை எம்.பி. வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. பிரியங்கா காந்திக்கு சத்தீஸ்கர் அல்லது மத்தியப்பிரதேசத்தில் இருந்து எம்.பி. பதவி வழங்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதால், இந்த மாநிலங்களில் இருந்து சில இடங்கள் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து 3 இடங்களும், மத்தியப் பிரதேசத்தில் இருந்து 2 அல்லது 3 இடங்களும், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இருந்து தலா ஒரு இடமும், சத்தீஸ்கரிலிருந்து 2 இடங்களும் கிடைக்கும். அதேசமயம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா,தெலங்கானா, மேகாலயா, அசாம் ஆகிய மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கான இடங்களை இழக்க நேரிடும்.