உத்தரபிரதேச  மாநிலத்தின் கிழக்குப்பகுதி  காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக  இன்று பொறுப்பேற்றுக் கொண்ட  பிரியங்கா காந்திக்கு பொது மக்களும், தொண்டர்களும்  உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பிரியங்காவை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த மாதம் 23-ந்தேதி ராகுல் அறிவித்தார். பிரியங்கா, உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 42 தொகுதிகளின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மற்ற 38 தொகுதிகளின் பொறுப்பாளராக இளம் தலைவர்களில் ஒருவரும் ராகுலுக்கு நெருக்கமானவரான ஜோதிராதித்யா சிந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவர்கள் இருவரும் இன்று உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள அம்மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். இதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா, ஜோதிராதித்யா சிந்தியா மூவரும் டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் லக்னோ விமான நிலையம் வந்தடைந்தபோது காங்கிரசார் மேளதாளம் முழங்க உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

லக்னோ நகரின் மையப் பகுதியில் மால் அவென்யூ எனும் இடத்தில் இருக்கும் உத்தரப்பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான “நேரு பவன்” நோக்கி வேனின்மீது நின்றவாறு அவர்கள் பேரணியாக சென்றனர். சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சென்ற இந்த பேரணியால் அம்மாநில காங்கிரஸ் பிரமுகர்களும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். 

பேரணி செல்லும் வழிநெடுக பிரியங்காவை வரவேற்று பல்லாயிரக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே வரவேற்பு வளைவுகளும், பதாகைகளும் அமைக்கப்பட்டிருந்தன. லக்னோ நகரில் திரும்பிய திசையெல்லாம் பிரியங்காவை வரவேற்று நோட்டீசுகள் ஒட்டப்பட்டிருந்தன.

முதல்முறையாக பொறுப்பு ஏற்க வருந்ததால் பிரியங்காவுக்கு வழி நெடுக உற்சாக வரவேற்பு கொடுக்க உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். 15 கி.மீ. தூரப்பாதையில் 32 இடங்களில் பிரியங்காவுக்கு காங்கிரசார் வரவேற்பு கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து ஹசரத்கஞ்ச்-ல் மகாத்மா காந்தி, அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் சிலைகளுக்கு ராகுல், பிரியங்கா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து பிரியங்கா உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதி பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.